சக்தி கவிதைகள்

1
நீ இன்னும்
எவ்வளவு தூரம்
இப்படியே
பறந்து கொண்டிருக்கப்போகிறாய்
யென்றேன்
வானம்
எவ்வளவு தூரமோ
அதுவரைக்கும்
நான்
பறக்கப் போகிறேன் யென்கிறது
அக்குருவி
நீண்டுகொண்டே போகிறது
வானம்
2
நீண்ட நேரமாய்
ஓர் சிலுவையை வரைந்து கொண்டிருக்கிறேன்
ஆம்! நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்
அச்சிலுவையைத் தான்
வரைந்து கொண்டிருக்கிறேன்
இன்னும் எத்தனை எத்தனை சிலுவைகளை
வரையப் போகிறேனென்று
எனக்கே தெரியவில்லை
உங்களின்
மனக்கைகளில் தான் இருக்கிறது
நான் வரைய போகும்
சிலுவைகளின் எண்ணிக்கைகள் !
என் பாவங்களை
முதலில் மன்னித்துக்கொள்ளுங்கள் இயேசுவே !
ஆணியைக் கொஞ்சம்
ஆழமாய் வரைந்து விட்டேன்
3
பழைய நினைவுகளை மனக்குகையிலிருந்து
பிசைந்தெடுத்து உறங்க வைக்க முற்படுகிறேன் இந்த இரவை!
இரவும் தூங்கிய பாடில்லை
நானும் உறங்கிய பாடில்லை
கசப்பான நினைவுகளை
அசைபோட்டுக் கொண்டே விழித்திருக்கிறேன்
விழியிலிருந்து லேசாய் வழிகிறது கண்ணீர்
போதும் போதும் யென்று
ஆவேசமாய்க் கத்துகிறது காரிருள்

Leave a comment