தமிழின் அடையாளம் ஆனவர் – அ.கி.பரந்தாமனார்

முனைவர் நா.சியாமளா
உதவிப் பேராசிரியர் , தமிழ்த்துறை
குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி
சரவணம்பட்டி, கோயம்புத்தூர்-35

ன்றாட நடைமுறையில் பயன்படும் மொழியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் இலக்கணத்தைப் புதிய தமிழுக்கு இலக்கணமாக்கிக் காட்டியவர் அ.கி.பரந்தாமனார்.

பள்ளி கல்லூரி நாள்களிலேயே தனி இதழ்களில் கவிதை எழுதி வெளியிட்டவர்.

பள்ளி கல்லூரிகளில் சரித்திரத்தை விரும்பிப் பாடமாகப் படித்தவர்.
அவர், மாணவர்கள் செய்யும் இலக்கணப் பிழைகளைத் தன் எழுதுகோல் கொண்டு வேரோடு களைந்தவர்;

நாளிதழ்கள் மாத இதழ்களைக் களங்களாகக் கொண்டு அதில் இடம்பெறும் தவறுகளையும் அதன் திருத்தங்களையும் சுட்டிக்காட்டி திருத்தி தமிழின் நிலையை உயர்த்திப் பிடித்தவர்.

நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்று யாரேனும் நம்மைப் பார்த்துக் கேட்டாலே தமிழ்ப் பெருமகனார் அ.கி. பரந்தாமனாரின் நினைவு வரும்; வராத மனிதர்களே இருக்க முடியாது .

ஸ்ரீனிவாச்சாரியாரும் திராவிட இந்தியா என்னும் புகழ்பெற்ற நூலின் ஆசிரியர் டி. ஆர் .சேஷய்யங்காரும் அ.கி.ப விற்குப் பேராசிரியர்களாக இருந்தவர்கள். அவர்கள் அன்று ஊட்டிய தமிழ்ப்பற்று தான் மதுரை நாயக்கர் வரலாற்றையும் தலைசிறந்த பாண்டிய மன்னர்களின் வரலாற்றையும் எழுதுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது என்று அ.கி.ப கூறுவார்.

மதுரைத் திருவள்ளுவர் கழகத்தில் வாரம் தோறும் மதுரை நாயக்கர் வரலாறு பற்றித் தொடர் சொற்பொழிவாற்றுவார் .ஆங்கிலப் பெரும் புலவர் கிப்பன் எழுதிய ரோமன் நாட்டு வரலாற்றை ஒட்டியே மதுரை நாயக்கர் வரலாற்று நூலை அவர் உருவாக்கியுள்ளார். தான் இயற்றிய நூல்களுள் இந்நூலையே சிறப்பானதாகக் கருதினார். தமிழ்நாடு ஞாயிறு மலரில் வாழ்க்கைக் கலை, பேச்சுக்கலை, தலைசிறந்த பாண்டிய மன்னர்களின் வரலாறு பற்றியும் சிறுவர் பாடல்களைக் கீரன் என்னும் புனைபெயரிலும் எழுதியவர் அவர்.

இவரது மணிவிழாவை மதுரைத் திருவள்ளுவர் கழகம் சிறப்பாகக் கொண்டாடியது .அவ்விழாவின்பொழுது எழுத்தாளர் மன்றத்தினர் இவருக்குப் பைந்தமிழ்ப் பாவலர் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தனர்.

பாடலில் கமழும் குழந்தை மனம்
பாடநூல்களிலும் மற்ற இதழ்களிலும் மாணவர்களுக்காக இவர் எழுதிய சிறுவர் பாடல்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு எங்கள் தோட்டம் என்ற நூலாக வெளிவந்தது. இந்த நூல் 1964 ஆம் ஆண்டிற்கான நடுவண் அரசின் சிறுவர் இலக்கியப் பரிசினை வென்றது. தமிழ் ஒலிமரபினையும் சமூகச் சூழலையும் சிறுவர் உலகிற்கு அறிமுகம் செய்யும் நோக்கத்துடன் படைக்கப்பட்டவையாக இப்பாடல்கள் அமைந்துள்ளன.


பாட்டி பாட்டி நீ உறங்கு!
பாட்டி யம்மா நீ உறங்கு!
பாட்டன் உன்னை அடித்தாரா?
பாட்டி யம்மா நீ சொல்லு!
வழக்கம் போல்உன் மருமகள்தான்
வைத துண்டா?சொல்லிடுவாய்!
விழியை மூடிநீ உறங்கு!
மெல்ல மெல்ல நீ உறங்கு!

முதுமையின் வழியே பிறக்கும் குழந்தை மனதை தன் பாடல் வரிகளில் சுட்டிக் காட்டியதோடு முதுமையின் மன வலிகளுக்கு மருந்தாகும் தாலாட்டாகவும் இவர் பாடல்கள் அமைந்திருக்கின்றன .இது இவரது உளவியல் அறிவையும் தெள்ளிதின் காட்டுகிறது.


இவரது சிறுவர் பாடல் நூலுக்கு நடுவண் அரசின் விருது கிடைத்ததை வானொலி வாயிலாக மதுரைத் தியாகராசர் கல்லூரியின் அந்நாள் முதல்வர் சிதம்பரநாதன் அவர்கள் கேட்டவுடன் அன்று மாலையே கல்லூரி வளாகத்தில் அ. கி. பரந்தாமன் அவர்களுக்குப் பாராட்டு விழாவை நடத்தி அவரது குழந்தை மனத்தைக் கொண்டாடினார்.

எழுத்தில் எழும் தன்னிறைவு
இருள் சூழ்ந்து ஊர் அடங்கி அமைதியாக இருக்கும் பொழுது தான் இவரது எழுதுகோலும் எண்ண அலைகளும் எழுந்து நின்று ஆர்ப்பரிக்கும். தான் எழுதும் கட்டுரைகளில் முழு மனநிறைவு ஏற்பட்டால்தான் அதை அவர் நூலாகக் கொண்டு வருவார். புரட்சிக் கவிஞர்கள் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பினை அவர் வெளியிடவில்லை. ஏனெனில் அவர் மன நிறைவடையும் வகையில் அதனை விரித்து எழுத வேண்டும் என்று அவர் நினைத்திருந்ததாகவும் அதைச் செய்வதற்கான சூழல் அமையாததாலும் வெளியிட இயலவில்லை என்று அவர் கூறியுள்ளமை இங்கு நினைவுகூர்தல் அவசியம்.

தான் எழுதிய கவிதை நூலை மகாவித்வான் வேணுகோபாலப் பிள்ளை அவர்களிடம் மேற்பார்வைக்காகக் கொடுப்பார் .தான் எழுதிய நூல்கள் பிழையில்லாமல் வெளிவர வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்துவார். நல்ல தமிழ் எழுத வேண்டுமா? என்கின்ற தனது நூலுக்கு கூடுதலாக இரு தமிழறிஞர்களை மேற்பார்வையிடச் செய்து பிழையின்றி வெளிவர ஏற்பாடு செய்தார்.

அறமறை காத்தவர்
தான் எழுதும் நூல்களுக்கு தாமே முதலீடு செய்து அதை அச்சில் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டார் .அவ்வமயம் மலர் நிலையம் பதிப்பகத்தார் தாங்களாகவே முன்வந்து அவர் நூல்களை விற்றுத் தர உரிமை கோரினர். அ.கி. பரந்தாமனாரும் அதற்கு உடன்பட்டு ஒப்புதல் அளித்தார். இவ்வாறு அவரது பல நூல்கள் வெளியாகிக் கொண்டிருந்த சமயத்தில் சில ஆண்டுகளுக்குப் பிறகு மலர் நிலையத்தார் விற்பனை செய்த நூல்களுக்கு உரிய தொகையைக் கொடுக்காததால் அதிக பொருள் இழப்பிற்கு ஆளானார் அ.கி.ப..

உடனே சற்றும் யோசிக்காமல் அந்தப் பதிப்பகத்தார் மீது வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றார். ஆயினும் ஓரளவுதான் பணம் கிடைத்தது. அந்தப் பணமும் வழக்கு நடத்தும் செலவுகளுக்குத் தான் பயன்பட்டது. ஓர் எழுத்தாளன் அதுவும் ஒரு தமிழ்ப் பேராசான் பதிப்பகத்தார் மீது வழக்கு தொடுத்து வெற்றி பெற்றது எழுத்துலகில் அன்று வியப்பான செய்தியாக அமைந்தது.

கவிஞர்களை உருவாக்கிய கவிஞர்
அ.கி.ப என்னும் மூன்றெழுத்துச் சொல் மாணவர் மனத்தைக் கட்டுப்படுத்தும் மந்திரச் சொல். மதுரைத் தியாகராசர் கல்லூரியில் இவர் பணியாற்றியபோது விடுதிக் காவலராகவும் இருந்தார். மாணவர்களுடைய அன்பைப் பெற்றிருந்ததால் அவர் பல ஆண்டுகள் விடுதிக் காவலராகப் பணியாற்ற முடிந்தது. எந்த ஒரு செருக்கும் இல்லாமல் இயல்பாக எப்பணியையும் மனமுவந்து செய்து முடிக்கக்கூடிய வல்லமைக் குணம் அவரிடம் இயல்பாகவே குடியிருந்தது.

அ.கி. பரந்தாமன் ஓய்வு பெற்ற போது அவரது மாணவர்கள் மதுரை விளக்குத் தூணில் இருந்து தியாகராசர் கல்லூரி வரை மேளதாளத்துடன் அவரை ஊர்வலமாக அழைத்து வந்தார்கள். கல்லூரியில் விடைபெறும் விழாவைச் சிறப்பாக நடத்தி பணமுடிப்பும் கொடுத்தார்கள். இவையெல்லாம் மாணவர்கள் அவர் மீது அன்பு மழை பொழிந்ததற்கான அடையாளங்கள். அப்துல் ரகுமான்,மீரா, நா.காமராசன்,மு.மேத்தா,இன்குலாப் முதலிய பெருங்கவிஞர்களை உருவாக்கியவர்.

“யாப்பிலக்கணத்தை எங்களுக்குக் கற்பித்தவர் அ.கி.பரந்தாமனார். யாப்பிலக்கணம் கல்லும் முள்ளும் நிறைந்த காடு, அக்காட்டுப் பயணத்தில் எங்கள் கையைப் பிடித்துக் கொண்டு வழிநடத்திச் சென்றவர் அவரே” என்று கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள் தம் ஆசானைக் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

வாழ்வியல் கோட்பாட்டின் வழிகாட்டி
இலக்கியத்திற்கென திறனாய்வுக் கோட்பாடுகளைத் தன் கவிதையின் வழியே கோட்பாடாக்கித் தந்தவர்.


கலையழ கொன்றே கவிதையின்- நோக்கெனக்
கலைஞர்கள் கழறுவரேனும்
கலையுணர் நோக்குடன் வாழ்வை-உயர்த்தும்
கருத்தினைத் தருவதும் கவிதை.


மனித வாழ்வை உயர்த்தும் கோட்பாடுகள் கவிதைவழி பிறந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த பார்வையை அகிலத்திற்குத் தந்தவர்.

தமிழின் அகத்திலே வாழ்ந்த பரந்தாமனாரைத் தமிழக அரசு தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் நிறுவிய போது அவருக்குத் திரு. வி. க விருதும் பொற்கிழியும் வழங்கிக் கௌரவித்தது.அ.கி.ப சிறந்த இலக்கிய இலக்கண நூலாசிரியர்; எழுத்தாளர்; பேச்சாளர்; கவிஞர்; சிறுவர் பாடல் ஆசிரியர் ; அதையும் தாண்டி மனித நேயம் மிக்க பண்பாளர். எங்கெல்லாம் நல்ல தமிழ் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் அ.கி. பரந்தாமனாரின் உள்ளம் வாழ்த்துமழை பொழிந்து கொண்டே இருக்கும். தமிழுக்காய் 1902 ஆம் ஆண்டு சூலை 15 அன்று பிறந்து தமிழுக்காகவே வாழ்ந்து 1986 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று நிறைந்த தலைமகனை அவர் பிறந்த சூலைத் திங்களிதழ் தன் மடியில் வைத்துத் தாலாட்டி மகிழ்வதில் பெருமை கொள்கிறது.

இலக்கியம் போற்றும் இனியவர் விரும்பிய
இலக்கினை நோக்கி நடப்போம்
இனிக்கும் தமிழைப் பிறர்க்கு என்றும்
இனிக்க இனிக்க கொடுப்போம்!

Leave a comment

Trending