மனோபாரதி கவிதைகள் மூன்று

- கடவுளும் மதமும்
கலவரத்தைப் பற்ற வைக்க
கடவுளைக் கையில் எடுக்கிறது
ஒரு கூட்டம்
அதைத் தடுத்துநிறுத்த
தடியைக் கையில் எடுக்கிறது
மற்றொரு கூட்டம்
என்ன நடந்தாலும்
வேடிக்கை பார்க்கும் பெருங்கூட்டத்தின்
முதல் ஆளாக
எப்போதும் போலவே கடவுள்.
2. பாவக்கணக்கு
எத்தனையோ முறை உறங்குவது போலவே
ஒத்திகை செய்து பார்த்திருக்கிறேன்
பேருந்துகளில்.
என் இருக்கையின் முன்னிருந்து
கைதட்டும் சத்தத்தைக் கேட்ட அடுத்த கணமே
என்னால் மிச்சப்படுத்தி வைக்கப்படுகின்ற
சில்லறைகளால்
ஏறிக்கொண்டே போகிறது
என் பாவக்கணக்கு.
3. பொதுவுடைமைவாதி
எல்லாச் சாதி மயிர்களும்
“வெறும் மயிர்கள் தான் ” என
நறுக்கிப்
பெறுக்கி
ஒன்றுசேர்த்து
மூலை (ளை )யில் வளர்க்கிறார்
சமத்துவத்தை
முடிதிருத்தம் செய்பவர்


Leave a comment